G7 உச்சிமாநாடு கால்கரிக்கு பெரிய பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், நகரவாசிகள்
இந்த காலகட்டத்தில் சிறிய சிரமங்களை எதிர்பார்க்கலாம். உலகத் தலைவர்களின் வருகையையொட்டி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே, நகரவாசிகள் பயணம் உட்பட சில தாமதங்களையும் கட்டுப்பாடுகளையும் சந்திக்க நேரிடும்.
உச்சிமாநாட்டிற்கு வரும் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், 2,000 பிரதிநிதிகள் மற்றும் 1,400 ஊடக பிரதிநிதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கால்கரி மேயர் ஜோதி கோன்டெக் தெரிவித்தார். மேலும், அதிகமான விருந்தினர்கள் வருவதால், தெருக்களிலும் உணவகங்களிலும் அதிக கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்றும் மேயர் கூறினார். வார இறுதியில் உயரதிகாரிகளும் பிரதிநிதிகளும் வருவதால், கால்கரி சர்வதேச விமான நிலையத்திலும் சாலைகளிலும் போக்குவரத்து அதிகரிக்கும் என்று மேயர் மேலும் கூறினார். கால்கரி வர்த்தக சபைத் தலைவர் டெபோரா யெட்லின் கூறுகையில், G7 உச்சிமாநாடு நகரத்திற்கு 190 மில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியையும், ஆல்பர்ட்டாவிற்கு 240 மில்லியன் டாலர்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சிமாநாட்டுடன் நேரடியாக தொடர்புடைய 10,000 ஹோட்டல் முன்பதிவுகள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. G7 உச்சிமாநாடு ஜூன் 15 முதல் 17 வரை ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறுகிறது.