அனில் அம்பானியின் மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவரது மகன் ஜெய் அன்ஷுல் அம்பானியின் கண்டாலா பண்ணை வீடு ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரூ.3034 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை புதிதாக முடக்கியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி மற்றும் வங்கி நிதி மோசடி வழக்கில், ரூ.3034 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தற்காலிக முடக்கம், சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், வங்கிகள் மற்றும் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்ற நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.