எட்மன்டனில் இந்திய மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில்வர்பெர்ரி (Silverberry) பகுதியில் உள்ள வாடகை வீட்டின் அடித்தள அறையில், 23 வயதான டமன்ப்ரீத் கவுர் (Damanpreet Kaur) ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்; பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது காதலரான 22 வயது ரிதீஷ் குமார் (Ritish Kumar) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 9-ஆம் தேதி, காவல்துறையினரும் அவசர மருத்துவக் குழுவினரும் டமன்ப்ரீத்தை ஆபத்தான நிலையில் கண்டறிந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூலை 12 அன்று அவர் உயிரிழந்தார். கழுத்து நெரிக்கப்பட்டதே அவரது இறப்புக்கான காரணம் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்ததாக எட்மன்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைக்குப் பிறகு, ரிதீஷ் குமாரைக் கைது செய்த காவல்துறை, அவர் மீது 'இரண்டாம் நிலை கொலை' (second-degree murder) குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது. இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.