சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை உலகிலேயே முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஊடக நிறுவனங்களின் அல்காரிதங்களை (algorithms) பயனர்கள் முடக்குவதற்கு அல்லது நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை முன்னின்று செயல்படுத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ், இந்த புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.
அல்காரிதங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதியை வழங்கத் தவறினால், மெட்டா (Meta), கூகுள் (Google) மற்றும் டிக்டாக் (TikTok) போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான அபராதங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.